Friday, May 21, 2010

மழை...



நீ
அவனா?
அவளா?

அவனுக்கு
அவளாகவும்,
அவளுக்கு
அவனாகவும்
உன்னால் மட்டும்
எப்படி
உருமாற முடிகிறது ???

---
---

நீ
காலன்
அனுப்பி வைத்த
காதல் மருத்துவனா??
சில்லு சில்லாய்
உடைந்துபோன
உறவுகள் கூட
சில்லென்ற
உன் வரவால்
சிலிர்த்தெழுந்து விடுகிறதே..!!

நீ
என்ன
திரவ மந்திரமா??
இதயத்தின்
அடித்தட்டில்
இறந்து கிடக்கும்
பெயர் தெரியாத
உறவின்
நினைவுகளைக் கூட
தொடாமல்
தொட்டு எழுப்பி
அவசரமாய்
ஒரு
ரகசியப்புன்னகை
பூக்கச் செய்கிறாய்...!


நீ
வானம் தெளித்துவிடும்
தியான திரவமா??
நீ
வரும்போது மட்டும்
காதலர்கள்
தன்னிலை மறந்து
நினைவுச் சிலையாகிப்
போகிறார்கள்....!!

---
---

நீ
என்ன
காயசண்டிகையின்
மாயப் பாத்திரமா??
வேரோடு விழுந்து
ஆறாக ஓடினாலும்
தீராத பந்தமாய்
மீண்டும் நீ
மழைகிறாய்!!!

---
---

பாவம்
நீயும்
பெண் தான்...
ஆம்...
கவிஞர்களுக்கு
கருவாகிக் கருவாகிக்
களைத்துப் போய்விட்டாய்...
ஆயினும்
அவர்கள் விடுவதாயில்லை...

---
---

அப்படி என்ன
உங்களுக்குள்
அந்தரங்க உறவு??
உன் பிரிவு
தாளாமல்
முகம் கருத்து
மேக மகள்
சோகமாகிப்போகிறாள்???

---
---

சமத்துவத்தின்
சாராம்சமே...!
சுயநலம் கடந்த
பொதுமனம் கொணர்ந்த
ரகசியம் சொல்வாயா??
மனிதர்களுக்கும்
அந்த
மந்திரம் சொல்வாயா??
வருணன்
வரம் கொடுத்த- அந்தத்
தருணம் சொல்வாயா...!!?

பிரபஞ்சத் தத்துவத்தை
ஒற்றைத் துளிக்குள்
எப்படி அடைத்தாய்??

குறுகக் குறுக
யோசித்து
இறுகிப் போன - மனித
இதயங்களை
எப்படி உடைப்பாய்...??


---
---


என்
முதல் ஸ்பரிசம்
நீ
எப்போது
கண்டாய்??

என்
முதல் கண்ணீர்
நீ
எப்போது
கரைத்தாய்???

உனக்கும்
எனக்கும்
நேசப்பூ
பூத்தது எப்போது???

என்
இமைக்குள் இறங்கி
எப்போது
என் இதயம் தொட்டாய்??

தொடக்கம்
நினைவில்லை...
எழுத்தை
முடிக்கவும்

மனமில்லை...

ஆயினும்
முடிக்கிறேன்...

கருவறையினை
கடந்த பின்னும்
உன்னில் தான்
நான் நனைந்தேன்...

கல்லறையை
அடைந்த பின்னும்
உன்னில் தான்
நான் நனைவேன்...

வா..
காத்துக் கொண்டிருக்கிறேன்...


அன்புடன்,
வசந்த் தக்ஷிணாமூர்த்தி.

Tuesday, May 11, 2010

உறக்கம்...

என்றோ
நிகழவிருக்கும்
மரண
நாடகத்திற்காய்
நித்தம்
நாம்
நடத்திப்பார்க்கும்
ஓரங்க
ஒத்திகை!

Sunday, April 25, 2010

கவிதை...

ரயில்
மழை
இரவு.

அவள்
நான்
தனிமை.


அன்புடன்,
வசந்த் தக்ஷிணாமூர்த்தி.

Monday, April 12, 2010

இது கல்வாரிப் பயணமடி...

வாழ்க்கை தேடும் வாலிபனிடம்,
வாலிபம்
தேடும் வான வில்லுக்காய்...

பெண்ணே!
நான்

போர்க்களத்தில்
வாள் சுழற்றிக்கொண்டிருக்கிறேன்!
நந்தவனத்தில்
நின்று கொண்டு
பூக்கனைத் தொடுக்காதே...!

வாழ்க்கைப்
படகு
தேடி
நெருப்பாற்றில்

நீந்திக்கொண்டிருக்கிறேன்
..
என் முதுகில்
இன்னொரு
உயிரா??
வேண்டாம்...

நீ
வாலிப
தேசம் செல்ல
நான்

உல்லாசக்கப்பல்
அல்ல...

நினைவில்
கொள்!
நீ

காதல்
முத்தெடுக்க
கானல்
நீரில்
மூச்சடக்குகிறாய்...!

நான்
வேரில்லாதவன்...
என்
தோளில்
ஊஞ்சல்
கட்ட
ஆசைப் படாதே...!

உனக்கு
காதல்
புரியும்..
ஆனால்
,
என்னைப்
புரியாது...

என்
வாழ்க்கை
பாலைவனப்

பயணம்
கடந்து
சூரியன்
தொடுவது!

பன்னீர்ப்
பூவே
உன்

கனவிதழ்களை

சுருக்கிக்கொள்
...!

என்
பாதை
கருப்பிரவில்
உறங்கி
நெருப்புத்
துண்டு விழுங்கி
நித்தம்
தொடரும்
ரத்த
யாத்திரை..!

அடிப்
பனித்துளியே,
உன் புளகாங்கிதம்
புல்லோடு
மட்டும் இருக்கட்டும்..
புயலோடு
வேண்டாம்...!

எப்படி
?
எப்படி
முடியும்?
கண்ணீருடன்

பன்னீர்

சமரசம்
செய்து கொள்ள
எப்படி
முடியும்?

ரோசாப்பூ

நெருப்புடன்

கைகோர்க்க நினைக்கிறதே....
எப்படி
முடியும்???

நான் மேகம்...
என்னை
விட்டு விடு..
வானவில்லில்
படுத்து ஓய்வெடுத்தால்
என்னால்
வாழ்க்கை
தேட
முடியாது...

நான்
காற்று...
ஆம்
,
சுவர்களுக்குள்

சுவாசிக்க
விரும்பாத காற்று...
மலர்களின் வாசனையில்
மயங்கி
நிற்க
மனமில்லை
...

உன்
பிஞ்சுப்பாதங்களை
பின்னோக்கி நகர்த்து...
என்னை
மறந்து விடு....

நீ
நிழலை
நேசித்துக்கொண்டிருக்கிறாய்
..
நீ பாலைவனத்தில்
பூப்பூக்கப்
பார்க்கிறாய்...

சூறாவளிச்

சுழல்
காற்றில்
புல்லாங்குழல்

வாசிக்க
ஆசைப் படுகிறாய்....

சூரியனுக்குள்

வசந்த
காலம் தேடுகிறாய்...

உன்
முல்லைப்
பாதங்களை
முள்
பாதையில்
நடக்க
விட
எனக்குச்
சம்மதமில்லை...

பஞ்சு மெத்தைகளில் தான்
நீ
பழக்கப்பட்டிருப்பாய்...
கத்தி
முனை
உனக்கு
சரிப்பட்டு வராது...

என்
தேடல்
முடியும்
வரை
காத்திருக்காதே
...

தேடலுக்கு
முன்
நானே
முடிந்து போகலாம்...

வெண்ணிலவே...
உன் வானத்தை மாற்றிக்கொள்...

அன்புடன்,
வசந்த் தக்ஷிணாமூர்த்தி.

வேறென்ன வேண்டும்...


எவர்
விழியும் காணாத
ஒரு தீவு வேண்டும்...
உணவற்று கனவற்று
எனைத் தேட வேண்டும்!

எவர் சுவடும் தீண்டாத
ஒரு
பாதை வேண்டும்...
உலகோடு ஒட்டாமல்
நான்
போக வேண்டும்!

மனித
ஒலி கேட்காத
புது பூமி வேண்டும்...
நான்
மட்டும் புல்லோடு
கவி
பேச வேண்டும்!

தவமேதும்
கலைக்காத
தனிக்காடு
வேண்டும்...
உலகத்து
உயிர்க்கெல்லாம் - நான்
தவம்
செய்ய வேண்டும்!

நில்லாத
காற்றோடு
நான் ஓட வேண்டும்...
இல்லாத
அவளுக்காய்
மறைந்து
அழ வேண்டும்!

என்
ஜீவன் தலை சாய
ஒரு
பெண்மை வேண்டும்...
மலர்
கூட அதிராமல்
அவள்
பேச வேண்டும்!

மழையோடு
காலாற
நடை
போட வேண்டும்...
நிலவோடு
முழு இரவும்
தமிழ் பேச வேண்டும்!

சிலு
சிலுக்கும் இலையோடு
கை
கோர்க்க வேண்டும்...
சில்லென்ற
இரவோடு
சிந்திவிழ
வேண்டும்!

உடைந்து
விழும் பனித்துளியை
உயிர்
தாங்க வேண்டும்...
உடலெங்கும்
களைப்பா?
நலம்
கேட்க வேண்டும்!

பறவைகளின்
சிறகிற்கு
சிக்கெடுக்க
வேண்டும்...
குருதி
படிந்த புறவுகளை
குளிப்பாட்ட
வேண்டும்!

வலை
சேர்ந்த மீனையெல்லாம்
கடல்
சேர்க்க வேண்டும்...
வழி
தேடும் மனிதர்களை
கரை
சேர்க்க வேண்டும்!

தேனெடுக்கும்
வண்டோடு
சுற்றி வர வேண்டும்...
மலரோடு
கவி கலக்க
பாஷை
ஒன்று வேண்டும்...!

என்
சிறகுகளை உரசாத
செவ்வானம்
வேண்டும்...
சிறு
பறவை காண்கின்ற
சுதந்திரங்கள்
வேண்டும்!

கண்ணோடு
தோகையரை
கழற்றி
விட வேண்டும்...
என்னோடு
துணைக்கு வர
கவிதை
தான் வேண்டும்!

பாலையிலும் பூப்பூக்கும்
கவியுணர்வு
வேண்டும்...
பனிமலையில்
தீ உரசும்
தமிழ்
வண்மை வேண்டும்!

எவர்
என்னை எதிர்த்தாலும்
நான்
வெல்ல வேண்டும்...
மேடைகளில்
வாள் சுழற்றும்
வார்த்தைகளே
வேண்டும்!

தரிசான
நிலமெல்லாம்
தளிர்
பூக்க வேண்டும்...
உழைக்கின்ற
உயிர் எல்லாம்
குளிர்
காய வேண்டும்!

உதடு
மட்டும் சிரிக்காத
நண்பர்கள்
வேண்டும்...
அவர்
தோளில் சாய்ந்து என்றன்
உயிர்
போக வேண்டும்!

உலகத்து ஞானங்கள்
நான்
காண வேண்டும்...
கண்டவற்றை
சிந்தாமல்
கவியாக்க
வேண்டும்!

மல்லார்ந்து
படுக்க
ஈரப்புல்வெளி
,
உயிர்
கழுவிக்கொள்ள
ஒற்றைப்
பனித்துளி,
மனம் விட்டுக் குளிக்க
சிந்தும்
மழைத்துளி,
கடைசி
காலம் வரை
காதலியின்
சிரிப்பொலி...!

இதிலொன்றும்
இழக்காத
ஒரு வாழ்க்கை வேண்டும்!
ஓர்
நாள் தான் வாழ்ந்தாலும்
இவை
எல்லாம் வேண்டும்...!

அன்புடன்
,
வசந்த்
தக்ஷிணாமூர்த்தி.

என்னவளுக்கு...

என் இதயத்தின்
அந்தப்புரத்தில்
வசிப்பவளே...
இது,
உன் இதயத்தின்
எந்தப்புரத்தையோ
வாசித்துக்கொண்டிருக்கும்
உன் காதலனின்
மௌன வரிகள்...

கவிதைகளில்
பொய் எடுத்து எழுத
நான்
கவிஞன் அல்ல..
ஆனால்,
ரத்தத்தில்
மையெடுத்து எழுதும்
காதலன்...!

ஒற்றைப் புன்னகையில்
உயிர் குடிப்பவளே,
நலமா?
கற்றைக் குழலில்
எனை முடிப்பவளே
சுகமா??
என் மௌனக்குளத்தை
சலனித்தவளே,
சௌக்கியமா???

கனவுக் களத்தில்
நான்
சுமந்து சென்றவளே..
சுகமா????

நீ
தூரத்திலிருந்து
பூக்கனை தொடுத்தாலும்,
இதயம் துளைப்பதென்னவோ
இரும்புக்கனை தான்...!

ஆனால்,
அருகில் இருந்து
அமிலம் ஊற்றினாலும்
எனக்குள்
பொழிவதென்னவோ
பூமாரி தான்...!

காதலை நிரப்ப
இதயம்...!

அப்படியென்றால்,
காதலர்களை
நெருக்க
இடைவெளியா?

இடைவெளி என்பது
சோகங்களையும்
காதலையும்
இறக்கி வைக்கும்
புல்வெளியா???

இந்த இடைவெளிதானே
உனக்குள் என்னையும்,
எனக்குள் உன்னையும்
உருமாற வைத்தது...!

இந்த இடைவெளிதானே
இரு
இதயங்களையும்
ஒரே நூலில்
இருக்கிப்பிடித்தது...!

இந்த இடைவெளிதானே
நம் உறவை
இன்னும்
விசாலப்படுத்தியது...

இந்த இடைவெளிதானே
நம் காதலின்
எடையை
அதிகரித்தது..!

அப்படியானால்,
நான் இடைவெளியின்
முதல் ரசிகன்...

என் உயிர்க்கடலின்
ஆழ் பரப்பில் சஞ்சரிப்பவளே...
எத்தனையோ பெண்மை
என் மேற்பரப்பில்
வந்து போனாலும்
உன் பாதச்சுவடு
தொட்டுப்பார்க்கத்தான்
நான் உள்நோக்கி
உயிர் தேய்கிறேன்...

என் தனிமையின்
தாழ்ப்பாள்
திறந்து கொள்ளும்போதெல்லாம்,
உன் நினைவைத்
தேடித்தான்
என் கண்கள்
உயிர் நோக்கி
ஊர்வலம் போகிறது...

நான்
கண்ணயரும்
இரவுகளிலெல்லாம்
இமை விளிம்பில்
நீ இருந்து
விசிறி விடுவதாகவே
தோன்றும்...!

என் இதயத்தை
தூசு தட்டுகிற
அந்திகளில் எல்லாம்,
பொசுக்கென்று
அவிழ்ந்து விடும்
உன்
ஞாபக மழையில்
அவசரமாய்
என் விழிகள்
அருவியாகிவிடும்...

அப்போதெல்லாம்...
காற்றாய்
நீ வந்து
கண்ணீர் துடைப்பதாகவே
நினைத்துக்கொள்வேன்..

சோகத்தின்
உச்சத்தில்,
வெயிலில்
புரண்டு துடிக்கின்ற
புழுவாய்
நெளியும் போதெல்லாம்,
உன் புகைப்படம் தான்
என் பூந்தோட்டம்..!!

நான்
ஒவ்வொரு நிமிடமும்
கண்மூடி கண்மூடி
உன்னை நினைத்துக்கொள்கிறேன்..!

யாருக்கும் தெரியாமல்
ரகசியமாய்
என்னை
நனைத்துக் கொள்கிறேன்...!

என் உணர்ச்சியின்
பாதியை
கவிதையாய்
இறக்கி வைத்திருப்பது
உன்
கண்களுக்கு தெரியும்...

மீதியை
கண்ணீராய்
இறைத்து முடித்திருக்கிறேன்..
உன்
இதயத்திற்கு தெரியுமா??


அன்புடன்,
வசந்த் தக்ஷிணாமூர்த்தி.

வெண் காவியம்... -அன்னை தெரேசா-

(இது
வெண் காவியமல்ல...!
பெண் காவியம்...!)

தங்கத்திற்கு
எதற்கு
தங்க மகுடமென
ஒற்றை முத்துக்காய்
நாங்கள்
முக்குளிக்கையில்
சொல்லாமல்
போய்விட்ட
சொக்கத்தங்கமே...
இதோ,
உனக்கு
என் தமிழ் மகுடம்...!

அன்னையே...
ஒரு ஜோடிக்
கண்களை வைத்துக்கொண்டு
பல கோடி மக்களுக்காய்
கண்ணீர் விட்ட
வெள்ளை மலரே...
நீ எங்கிருக்கிறாய்...?

தும்பைப் பூ
உடை தரித்த தூயவளே...
அன்பிற்காய்
நிறம் துறந்த தூரிகையே...
அன்பின்
அமுத சுரபியே..
நீ எங்கிருக்கிறாய்??

உலகத்து உயிர்களுக்காய்
பிச்சிப்பூ விரல் கொண்டு
பிச்சைப் பாத்திரம் ஏந்தி,
எச்சிலை கூட
ஏகாந்தமாய் ஏற்றுக்கொண்ட
அன்பின்
அட்சயப் பாத்திரமே..
நீ எங்கிருக்கிறாய்??

சொர்க்கத்தில்
கண்ணீர் துடைக்க
நீ சொல்லாமலே
போய் விட்டாயா...?

பாரஞ்சுமக்கவே
புறப்பட்டு வந்த
பாரிஜாதமே...!

உயிர் சுமை
தாங்கித் தாங்கியே
உலகத்து ஞானங்கண்டவளே...!

புல்லின்
பனிச் சுமையைக் கூட
பொறுக்க மாட்டாமல்
இதயம் கசியும்
ஈர பூபாளமே..
உனக்காக நாங்கள்
உயிர் கசிகிறோம்...!

எங்களது
ஒற்றைக்குடையை
களவாடிய
காலனே...
உனைக் கண்டிக்கிறேன்...

புன்னகைத்துப்
புன்னகைத்தே
எங்கள் உயிருக்குள்
பூப்பூக்கச் செய்தவளை
திருப்பிக்கொடு....

பார்வைகளாலேயே
இப் பிரபஞ்சத்தின்
அழுக்கை
வெளுக்க வந்த
வெள்ளை நதியை
திருப்பிக்கொடு....

அன்னையே...
உன் பிரிவு தாளாமல்
எங்கள் உயிர்களெல்லாம்
அனுமதி இல்லாமலேயே
அஹிம்சைத் தற்கொலை
செய்து கொள்கின்றன...

வந்து விடு..!
நீ வந்து விடு...!

நீ மழைத்துளியாய்
விழப்போகும்
அந்த மணித்துளி சொல்...
ஓடோடி வந்து
உனைத் தாங்க
நாங்கள் உயிர் விரிக்கிறோம்..

நீ தென்றலாய்
வீசப்போகும்
திசை தெரிவி...
எங்கள்
ஆத்மா திறந்து
உன்னை நிரப்பிக் கொள்கிறோம்...

ஆம்..
உன்னை
உயிருக்குள்
நிரப்பிக் கொள்கிறோம்...!


அன்புடன்,
வசந்த் தக்ஷிணாமூர்த்தி.


அந்தக் கண்களுக்காய்...

 
பகலிலும்
பௌர்ணமி தேடும்
இருண்ட
சூரியன்களுக்காய்...

ஏதோ ஓர்
இருட்டு மூலையில்
தனக்குத் தானே
மௌன யுத்தம்
நடத்தும்
மனித உயிர்களுக்காய்...


கணினி யுகத்திலும்
கற்கால
வாழ்க்கை நடத்தும்
கண்ணீர்த் துளிகளுக்காய்...


மருத்துவர்களே..!

இறப்பு என்பது
இயல்பு...

தரை விழுந்த
மழை போலவே
மீட்க முடியாதது..!

விட்டு விடுங்கள்...!
ஆனால்,
இருட்டு என்பது???

மொழி இல்லாதவர்கள் கூட
வாழ்ந்து விடலாம்...

விழி இல்லாதவர்கள்??

உலகம்
திறந்து கிடந்தும்,

கற்பனையில்
உருவம் வரைகிறார்கள்
அந்த
கனவு ஓவியர்கள்...!


வானவில்லிற்கு
ஏழு நிறங்களாமே...
இவர்களுக்கு
எந்த வார்த்தைகளால்
எடுத்துச்சொல்வது??


நிறமற்ற
வாழ்க்கைக்கு
வரம் கொடுத்த
இறைவா..!

குற்றம் அறியவே
நெற்றிக்கண் கொண்டாயே...,

இங்கு
முகக் கண்களே
இல்லை...

மூன்றாம் கண்
கொடுப்பாயா...??


இவர்களின்
பாதையில்
இருட்டுக் கம்பளம்
விரித்து விட்டாயே...!


இவர்களின்
கனவுகள் கூட
நெருப்பை
உமிழ்ந்து கொண்டு
கருப்பாய்...கருப்பாய்...!


இறைவனே...

இனியும்
விழியற்ற
உடல்களை செய்வதாய் இருந்தால்
உன் உற்பத்தி
தொழிற்ச்சாலையை
மூடிவிடு...!


அந்த
ஈர இதயக்காரர்களின்
வாழ்க்கை முறை
அறிவாயா??


சுட்டால் பகல்,

குளிர்ந்தால் இரவு,
தொட்டால் மனிதன்,
வருடினால் காற்று...!

தனை வந்து இடித்தால்
உயிருள்ளவை!

தான் போய் இடித்தால்
உயிரற்றவை...!


வேண்டாய் வெறுப்பாய்
கட்டிப்பிடித்தால்
அரசியல் வாதி!

வேகமாய்
மூச்சிழுக்கச் சொன்னால்
கண்டிப்பாய்
அவன் மருத்துவன்...!


விழியில் வடியும்
இருட்டுத் திரவம்
கண்ணீரா குருதியா
எதுவும் தெரியவில்லை...!


மரம் செடி கோடி
வானின் நிறம்
நிலவின் வடிவம்
எதுவும்
அவர்களாய் அறியவில்லை...


வாசத்தை வைத்தே
வாழ்க்கை நடத்துகிறார்கள்
இந்த வாசமில்லா மலர்கள்...


உலகமே
முன்னேற்றத்தின்
வெளிச்ச வெள்ளத்தில்..

ஆனால்,
இவர்களுக்கென்னவோ
இருட்டு இரவில்
கருப்பு பயணம் தான்..


சாகா வரம் கொடுக்கும்
அறிவியல் வந்தாலும்
இவர்களுக்கென்னவோ
சலனமற்ற முகத்தோடு
இதயத்தின்
ஒற்றைப்பாதையில்
மௌன ஊர்வலம் தான்...!


அனுதாபப் பார்வை
இலவசமாய் வழங்கிவிடலாம்..

அன்றாட வாழ்க்கைமுறை
விசாரித்தால்...

கண்ணீரின் வாசனை
தொண்டையை அடைக்கிறது..


இவர்களுக்கு
எல்லா காலமும்
இலையுதிர் காலமா??


வாழ்க்கை முழுவதும்
கண்ணா மூச்சி ஆட்டமா??


வேண்டாம்...!

தடவிப் படிக்கும்
மொழிகள் வேண்டாம்...!

தடயம் பார்க்க
விழிகள் கொடுங்கள்...!


இடறி நடக்க
ஊன்று கோல் வேண்டாம்...!

இமயம் கடக்க
பார்வை கொடுங்கள்...!


மனிதர்களே...

இறந்த பிறகு
விழிகள் கொடுங்கள்...!

சுவாசிக்கும்போதே
இவர்களுக்கு
சொர்க்கம் கொடுங்கள்..


விளக்கேற்ற வேண்டாம்...
விடியலுக்காய்
காத்துக்கொண்டிருக்கும்
உயிர்களுக்கு
விழிகள் கொடுங்கள்...


அது
ஆயிரம்
சூரியனுக்கு
சமம்...!


அன்புடன்,

வசந்த் தக்ஷிணாமூர்த்தி.

அந்த நாட்கள்...

கல்லூரி...!
உச்சரிக்கும்போதே
உடல் சிலிர்க்க,
நந்தவனமே அல்லவா
உயிர்த்தெழுந்து
புன்னகை
பூக்கிறது...!

கல்லூரி நினைவுகள்
இரவுக் கனவுகளில் கூட
இமைகளில் அல்லவா
வேர்பிடித்து விடுகிறது...!

பாலைவனத்தில்
திடீரென்று
பீறிட்டெழுகின்ற
நீரூற்றைப் போலவே
பதினேழாம் வயதின்
பசுமைச் சம்பவங்கள்
கல்லூரிப் பொழுதுகளே..!

கல்லூரிக் காலங்கள்,
நினைவுப்பக்கங்களில்
நீந்திக் கிடக்கின்ற
கண்ணீர்க் கவிதைகள்...

இதயப் புல்வெளிகள்
ஈரம் சுமக்கும்
பழைய கனவுகள்...

நினைத்தவுடன்
இமைகள் கசியும்
இனியப்பொழுதுகள்...!

ஏரியைக் கண்டுவிட்ட
அரபு நாட்டுக்காரன்
அதிலிருந்து
ஏறி வர மனமின்றி
இதயம் தவிப்பானே..,
அது போலத்தான்
கல்லூரி
நினைவுகளும்...

இந்த அவசர
வாழ்க்கையை
அவசரமாய்
ஒதுக்கி வைத்துவிட்டு,
பதுக்கி வைத்திருந்த
பழைய நினைவுகளை
புரட்டிப்பார்க்கிறேன்...!

கல்லூரிக்
கடைசி நாள்...

தேன் மட்டுமே
சுரந்து கொண்டிருந்த
சின்னப்பூக்கள்
கண்ணீர் சுரந்த
அந்த பன்னீர் நாள்...!

முடிந்து போன
நிகழ்வுகளை
முடிபோட்டு முடிபோட்டு
முகம் பார்க்க முடியாமல்
மூலைக்கொன்றாய்
சில கூட்டம்...!

அழுகின்ற
கண்களுக்கு
ஆறுதல் சொல்ல முடியாமல்,
திரும்பி நின்று
கண் துடைக்கும்
திராணியற்ற
சில கூட்டம்...!

கல்லூரி வளாகத்தில்
பனித்துளி போல்
சிதறி அமர்ந்து,
மழைத்துளி போல்
கதறி அழுதது
இதயத்தின்
ஆழத்தில்
இன்னும் மிதக்கிறது...!


பனித்துளி தாங்கி
கனத்து வரும்
தென்றலைப் போலவே
விழித்துளியின்
சுமை தாங்காமல்
இதயம் கனக்கிறது...!

ஆனாலும்,
கொஞ்சம்
இனிக்கிறது...!


அன்புடன்,
வசந்த் தக்ஷினாமூர்த்தி.


புன்னகை...

மழலைகளுக்கும்
மலர்களுக்கும்
ஞாபகமிருக்கிறது...

மனிதர்களே..
இந்த வார்த்தை
உங்களுக்கு
ஞாபகமிருக்கிறதா...??

வார்த்தையாய்
ஞாபகமிருக்கும்...
வாழ்க்கையில்
ஞாபகமிருக்கிறதா..??

இதயத்தில்
ஞாபகமிருக்கும்...
இதழ்களில்
ஞாபகமிருக்கிறதா...??

மனிதர்களே...
உதடுகள்
திறவுங்கள்...
அது ஒன்றும்
உங்கள் பணப்பெட்டி அல்ல..
மனம் விட்டுப்
புன்னகையுங்கள்..
கரையப்போவது
உங்கள்
வங்கிக் கணக்கு அல்ல...!!

புன்னகை...
இது வாழ்க்கையை
நீட்டிக்க உதவும்
வாய்பாடு...
சூழ்ச்சிகளை
அறுத்தெறியும்
சூத்திரம்...

புன்னகையை
உதடுகளில்
தேக்கிவைத்து
பொய்யாய்
உதிர்க்காதீர்கள்...!

ஒவ்வொரு முறையும்
உயிரில் உற்பத்தியாகி
பூவாசம் சுமந்து
புறப்பட்டு
உதடு வழி
வழிய வேண்டும்...

புன்னகை சிந்துங்கள்..!
பணம்,
புகழ்,
பாரம்,
எதுவுமே வேண்டாம்...
பூமிக்கொரு
பூபாளம்
பாடுங்கள்...!



அன்புடன்,
வசந்த் தக்ஷினாமூர்த்தி.

Sunday, April 11, 2010

சொல்லுங்கள்..

காதல்...
உலகில் ஜனிக்கின்ற
ஒவ்வொரு மனிதனும்
இறக்கின்ற வரையில்
இதயத்தில் சுமக்கின்ற
ஈர வார்த்தை!

பிறப்பில்
தொடங்கி
இறப்பில்
முடிவது
இயற்கை நியதி!

கண்களில்
தொடங்கி
கண்ணீரில்
முடிவது
காதல் நியதியா???

இங்கு
சப்தங்களெல்லாம்
சமாதியாகும்,
மௌனம் மட்டுமே
மகுடம் சூடும்...

இங்கு
நிஜங்களை விட
நிழல்களே இனிக்கும்...

ஆம்...
காதலியின்
கண்ணீர்க் கடிதம்!
காய்ந்த பிறகும்
இதயத்தில்
மணம் விசும்
அவள்
கூந்தல் பூ!
மனதைப் போலவே
உடைந்து கிடக்கும்
வளையல் துண்டுகள்!
இமைகளில்
நுழைந்து
இதயம் தொடுகின்ற
ஈரக்கனவுகள்!
இது போல...
இது போல...!

இங்கு

காரணமில்லாத
சோகங்களெல்லாம்
சோபிதம் பாடும்...

ஏரிக்கரை ஓரத்து
ஒற்றைப்
பனைமரம் போலவே
தனிமை தேடி
மனசு
தத்தளிக்கும்..!

சலனமற்ற
சன்ன அலைகள்
உயிருக்குள்
எழுந்து எழுந்து
உல் மனக்
கதவு தட்டும்!

தனிமைகளில்
இதயத்தின் எடை
இரு மடங்காகும்!
பிரிவிலும்
மனம் ஒரு
சுகம் காணும்!

கட்டில் மேல்
உடல்
கவிழ்ந்து கிடக்கும்
ஆனால்,
நினைவுகளோ
கட்டவிழ்த்துக்கொண்ட
சிட்டுக்குருவிகளாய்
பழைய சம்பவங்கள்
பல தாண்டிசிறகடித்து
அவள(ன)து
முதல் சந்திப்பில் போய்
முட்டி நின்று
மூச்சு வாங்கும்..!

தூரத்தில்
அவள்(ன்) முகம்
தெரிந்து விட்டால்
நட்டு வளர்த்த
பூச்செடி
மொட்டு விடுவதைப் போலவே
உள்மனதில்
ஒரு கோடி
வெண்
புறாக்கள்
ஓசையின்றி
சிறகசைக்கும்..!

இதயத்தின்
மூலை முடுக்கெல்லாம்
அவள்(ன்)
சிரிப்பின் எதிரொலி
அந்திகளில்
பந்திவைக்கும்...!

அதிகாலைப்
புல்லின்
பனித்துளி பொலவே
எதிலும்
ஒட்டாமல்
மனசு
அந்தரத்தில்
அத்வைதம்
காணும்...!

அவள(ன)து
ஓரப்பார்வை
ஒரு நாள்
பருகாவிட்டலும்
அன்றிரவு
விழிகள்
வேலைநிறுத்தம்
செய்யும்...!

எங்கே...
இக்தெல்லாம்
எனக்கில்லை என்று
எவரேனும்
இதயம் தொட்டு
சொல்லுங்கள்....!!!



அன்புடன்,
வசந்த் தக்ஷினாமூர்த்தி.

ஒரு எழுதுகோல் பேசுகிறது...

இது உள்ளிருக்கும் எனது சரணங்களுக்காய் படிக்கட்டுகளிலேயே இந்தப் பனித்துளி பாடிக்கொள்ளும் பல்லவி வரிகள்!!

எனது இதயத்தோட்டத்தில் விழப்போகும் விமர்சன மழைக்காய், முகத்துவாரத்திலேயே ஒரு வானம்பாடியின் மேகதூதம்!

நனையப்போகும் உங்கள் மனதை முன் கூட்டியே மலர் கொண்டு துவட்டியனுப்பவே இந்த முன்னேற்பாடு!

வைகறை விடியலை வரவேற்க சின்னப்பூக்களெல்லாம் வண்ண இதழ்களில் பனி சுமப்பதைப் போலவே, வாசக இதயங்களை வாசனையுடன் வரவேற்க இந்தச் சின்னப் பறவை சிறகு விரிக்கிறது!

சரிந்து விழும் அருவியின் அருகில் அமர்ந்து கொண்டும், மலைப்பூக்களின் மடியில் கொஞ்சம் மறைந்துகொண்டும், சருகு உதிரும் சப்தத்தினை ரசித்துக்கொண்டும் கவிதை எழுதவே பிரியம்.
ஆனால், இங்கு பூபாளம் சுமந்து வரும் பூங்காற்றுமில்லை, ஊதாப்பூ கொண்டு மாராப்பு மூடும் மலையடிவாரமும் இல்லை...!

காதில் கேட்பதெல்லாம் கார்ச்சத்தமும், கார்கில் யுத்தமும் தான்... ஆயினும் தயக்க நடைபோடும் தங்க வார்த்தைகளுக்கு தவம் செய்து கன்னித்தமிழில் கவி இயற்றவே ஆசைப்பட்டிருக்கிறேன்...

சிலர் அமுத மழை பொழிந்தாலும், பலரது அமில மழை கடந்தே இந்த ஓடை பயணித்திருக்கிறது...

இந்த நத்தை ஊர்ந்து ஊர்ந்து வந்து தன முதுகுச் சுமையை முனகல்களாய் இங்கு இறக்கி வைத்திருக்கிறது...

மனதிற்குள் ஒவ்வொரு முறையும், மழை அடிக்கின்ற மாலைப் பொழுதிலும், துயரங்களால் துரத்தப் படுகின்ற இருட்டு இரவுகளிலும் தமிழின் மடியில் தான் நான் தலை சாய்த்திருக்கிறேன்...

உள்ளே சொல்லியிருப்பதெல்லாம், கடல் தாண்டி ஓடும் கம்பனது கற்பனைகளோ, வாழ்க்கையை புரட்டிப் போடும் வாசகங்களோ அல்ல...

இந்தச் சின்ன இதயத்தில் ஏற்பட்ட உணர்ச்சிக் கொந்தளிப்பிற்கு கொடுத்திருக்கும் எழுத்து வடிவம்... அவ்வளவுதான்...

ஒருவேளை,
நான் ஓவியனாய் இருந்திருந்தால், இதே உணர்ச்சிகளை என் தூரிகை பேசியிருக்கும்...


என்றும் அன்புடன்,
வசந்த் தக்ஷிணாமூர்த்தி.