Wednesday, November 23, 2011

பெண்மை...

உதடுகளின்
ஈர வெடிப்பில்
தேங்கிவிடச்
சம்மதமில்லை!

மார்பகங்களின்
மந்த வனப்பில்
தடுக்கி விழ
மனமில்லை!

கருவிழியின்
இரவுக்குள்
தொலைந்து போக
விருப்பமில்லை!

இமை விளிம்பின்
நிழலுக்குள்
இளைப்பாற
இஷ்டமில்லை!

காதோர
சன்ன ரோமத்தில்
சிக்கிக்கொள்ளும்
சிந்தனை இல்லை!

கழுத்தோர
சின்ன ஈரத்தில்
கரைந்து போக
இஷ்டமில்லை!

ஒய்யார
கன்னக் குழியில்
சுழன்று போக
சம்மதமில்லை!

உள்ளங்கை
மென்மைக்குள்
உறங்கிப் போக
விருப்பமில்லை!

நெற்றிக்
கதகதப்பில்
உருகிப் போக
உத்தேசமில்லை!

கருங்கூந்தலில்
மை கொண்டு
கவிஞனாகும்
கனவுமில்லை!

சின்னச் சின்ன
வளைவுகளில்
சரிந்து போகச்
சம்மதமில்லை!

என் ஆண்மையின் தேடல்
இவையேதும் இல்லை!
இவையேதும் தடுத்தால்
அது தேடல் இல்லை!
இவைதாண்டி கிடைத்தால்-
அவள்,
என் தேடலின் எல்லை!


அன்புடன்,
வசந்த்.

Tuesday, November 15, 2011

உங்களுக்காக...

தன்னந்தனி விதை முளைத்து
வயலையேவா நிறைத்து விடும்...?
ஒற்றைத்துளி மழை விழுந்து
ஊரையேவா நனைத்து விடும்...?

இருந்தாலும் எழுதிடறேன்...
யாருக்கோ அழுதிடறேன்...

மலைபோல விஞ்ஞானம்
மளமளன்னு வளந்தாலும்
நம்பிக்கையோட சேர்ந்து - மூட
நம்பிக்கையும் வளருதுங்க...

அக்கம் பக்கம் சுத்திப் பாத்தா
பல கூத்து நடக்குதுங்க
ஒன்னு ரெண்டு சொல்லுறேங்க
உங்களுக்கும் சேத்துதாங்க...

மனுஷன் செஞ்ச பாவத்துக்கு
ஆடு கோழி அருக்குறாங்க
சாமியோட செல கழுவ
ரத்தக்கொடம் தூக்குறாங்க...

உசுருள்ள ஜீவ ராசி
ஒவ்வொன்னும் சாமிதாங்க
உசுருக்குள் புதஞ்சிருக்கும்
நெசஞ்சாமி அன்புதாங்க...

புள்ள குட்டி அத்தனையும்
பட்டினியால் தவிக்குதுங்க
பொண்டாட்டி தாலி வச்சு
போலி பூஜ நடக்குதுங்க...

ஒன்னு ரெண்ட கூட்டிப் பாத்து
ஒம்பதால கழிக்குறாங்க
ஆத்தா வச்ச அழகு பேர
சூத்திரத்தால் மாத்துறாங்க...

எண்ணுக்குள்ளே ஒண்ணுமில்லே
எழுதி நானும் தாறேனுங்க
எண்ணத்தோட உழைப்பிருந்தா - தல
எழுத்து கூட மாறும் போங்க...

வட்ட ரேகை புள்ளி ரேகை
வாழ்க்கை நிலை சொல்வதில்லை
விலங்கினங்கள் ஏது ஒன்றும்
ஆயுள் ரேகை பார்ப்பதில்லை...

பச்சக் கல்லு மோதிரத்தால்
பணங்காசு சேராது
சிறுநீரக அடைப்புக்கல்ல
செவப்புக் கல்லு கரைக்காது...

நேரங்காலம் பாக்காம
வேர்வ சிந்த திட்டம் போட்டா
கப்பல் கூட காலடியில்
எப்படி நான் வெளங்க வப்பேன்...
தன்னந்தனி விதை முளைத்து
வயலையேவா நிறைத்து விடும்...?
ஒற்றைத்துளி மழை விழுந்து
ஊரையேவா நனைத்து விடும்...?

இருந்தாலும் எழுதிடறேன்...
யாருக்கோ அழுதிடறேன்...


அன்புடன்,
வசந்த்

Tuesday, September 20, 2011

இதற்குத்தானே...

(கிராமத்தில் இருக்கும் தனது காதலியைக் காண ஓடிவரும் ஒரு நகரத்து காதலனின் முனகல்கள்...)

பல மணி நேரம்
பயணித்து
உன்
பனிமுகம் பார்க்க
வந்திருக்கிறது
இந்த பருவ நதி...


உன்
ஓர விழிப்
பார்வைக்காய்
ஓடிவந்திருக்கிறது
இந்த தென்றல்...


புல்லில் விழும்
பனித்துளி
அதன்
சல்லி வேர் தொட்டு
சந்தோஷிப்பதைப் போலவே
உன் மடியில்
முகம் புதைத்து முக்தியடைய
முகிலாய் வந்திருக்கிறான்
இந்த
முடிசூடா மன்னன்...

உனது
புன்னகைக்காய்
பூக்கனை தொடுத்து
புறப்பட்டு
வந்திருக்கிறது
இந்த புல்லாங்குழல்...

அந்தி வேளைகளில்
அழைக்காமலே ஓடிவரும்
கவிதைகைளைப் போலவே
உன் பாதத்தின்
இளஞ்சூடு காண
ஒரு தூரத்து ஜீவன்
தூறலாய் வந்து
விழுந்திருக்கிறது....


பதினெட்டு வருடம்
படுத்திருந்த
என் கண்ணீர் நதி
சொல்ல முடியாத
சோகத்தால்
பட்டென்று படிதாண்ட
உன் தோட்ட மலர்களில்
பனியாய் உறைந்திருக்கிறது
ஒரு உயிர்...


பிசுபிசுக்கும்
ஈர ரத்தத்தோடு
உள் மனதிற்குள்
அம்பு சுமந்து
உனக்காக கொஞ்சம்
உயிர் சுமந்து
ஓடோடி வந்திருக்கிறது
ஒரு ஊமைப்பறவை...


இதயம்
பாதிக்கப்பட்ட
பருவக்காற்று
நிவாரணத்திற்காய்உன்
உயிர் நோக்கி
ஊர்வலம் வந்திருக்கிறது....


இடுப்பில்
குடம் சுமந்து
இடக்கையில்
மலர் சுமந்து
நடக்கும் இளந்தளிரே...
உன் குடத்திலிருந்து
ததும்பும்
தண்ணீரைப் போலவே
உயிர் ததும்ப அழும்
ஆத்மாவின் குரல் கேட்கிறதா....


அடி பெண்ணே...
என் சன்னலோரத்தில்
ஒரு
சின்னப்பார்வை வீசு...

பன்னீர்ப்பூ
விரல் கொண்டு
என் கண்ணீர் துடை...

உன் ஈரப்பார்வையால்
இதயம் நனைத்து
கைக்குட்டையால்
தலை துவட்டு....

அந்தி நேரத்தில்
மல்லார்ந்து படுத்து
மனம் விட்டு அழ
உன் மடி கொடு...

உன் கண்ணீர்
என்
கன்னத்தில் விழ,
உன் உதடு
என்
காதுகளில் உரச
என்
தலை களைந்து
ஆறுதல் சொல்...

உன் தாவணி
பிழிந்து
என் தாகம் தனி...

உன் கூந்தல் கொண்டு
என் முகம் மூடு...

இது போதுமடி
முல்லையே...

இதற்குத்தானே
என் உயிர்
ஏங்கி ஏங்கி
இளைத்தது...
இதற்குத்தானே
என் தேகம்
இறந்து இறந்து
முளைத்தது...

இனி
இறந்தாலும்
என் சவம்
நிம்மதியாய்
எரியும்...!

அன்புடன்,
வசந்த்.

Wednesday, September 7, 2011

மௌன ராகம்...!

எல்லோரும்
வாழ்வின் அர்த்தம் புரியாமல்
ஏதோ ஒரு
தாள கதியில் ஆடிக்கொண்டிருக்க,
உன்
பாத அடிகள் மட்டும்
நிதானமாய்....

உறங்கும் நேரம் தவிர
மற்ற நேரங்களில்
மனிதர்கள்,
மன உலையின் வெப்பங்களை
விழி வழியே துப்பிக்கொண்டிருக்க
உன் விழிகள் மட்டும்
எப்போதும்
நிசப்தமாய்...

தெரியுமா உனக்கு....?
யாருமே
உன் புன்னகைக்கு
மறு புன்னகை தருவதில்லை...
ஆயினும்
யாருக்கும் நீ
மௌனப் புன்னகை
பூக்க தவறுவதில்லை...

நமக்குள்
இது என்ன பந்தம்...?
பூர்வஜென்மமா
அல்லது
பூர்வீகமா??

வியக்கிறேன்...!
எங்கு சென்றாலும்
நீ என்னை தொடர்கிறாய்...

ஆயிரம் முகங்களுக்கு
மத்தியிலும்
உன் முகத்தை மட்டும்
என் விழிகள் சட்டென்று
படம் பிடித்து விடுகின்றன...
ஆயிரம் இரைச்சல்கள்
பின்னணி இசை
சேர்த்தாலும்
உன் குரலை மட்டும்
வடிகட்டும் திறனை
என் காதுகள்
கற்றுக்கொண்டுவிட்டன...

ஒவ்வொரு முறையும்
நீ என்னை கடந்து போகையில்
உன் விழி பார்த்து
நெகிழ்வதா,
அல்லது
உன் புன்னகை பார்த்து
மகிழ்வதா
என்ற குழப்பத்திலேயே
அனிச்சை செயலாய்
என் கைகள்
சட்டைப் பையை
துழாவுகையில்
நீ கடந்தே போய் விடுகிறாய்...

என் பாசத்திற்குரியவனே....

...
பார்வையற்ற
ரயில் பாடகனே...!

Sunday, March 27, 2011

செவிகொடு...



செவிகொடு
சமுதாயமே...
உனக்கொரு
சேதி சொல்கிறேன்...!

இன்று
உனக்கொரு
சவக்குழி இனாம்...!
நாளை
உயிருடன் உள்ளே நீ...
அதன்மேல்
அரசியல்வாதியின்
பளிங்கு மண்டபம்..! 

விழித்துக்கொள் சமுதாயமே...
சலுகைகள்
உன் கண்முன்னே
தோண்டப்படும்
உனக்கான சவக்குழிகள்..!

உணர்வுகள் விற்றாய்...
உரிமைகள் விற்றாய்...
தன்மானம் விற்றாய்...
மண்மானமும் விற்றாய்...

இனி
ஏது விற்பாய் மனிதா..
இலவசங்களுக்கு....?

இனாம்
வாங்கி வாங்கியே
வளைந்து போன
உன் முதுகுத்தண்டு
இனி
நிமிரவே நிமிராதா...?

உன்
அரை வேஷ்டி உருவி
அதிலிருந்து உனக்கொரு
புதுக் கோவணம்
இனாமாம்...!
ஓடு...
இலவசக் கோவணம்
இன்றே கடைசியாம்...!

உன்
அறுவடை களவாடி
உனக்கு
ஒரு வேளை சோறு
இலவசமாம்...!
ஓடு...
புறங்கை நக்கி
புசித்துவிட்டு வா...!

நினைவில் கொள்...
கட்டிக்கொள்ள
தலைக்கொரு
அரைக்கோவனம் இனாம்,
நின்று கொள்ள
ஆளுக்கொரு
சதுரடி இனாம்,
உயிர் நனைக்க
நாளுக்கொரு
குவளைத் தண்ணீர் இனாம்...
என்ற நிலை வரும்...!

போதும்...!
இனாம் போதும்...!

உரிமை கேளுங்கள்...
நீங்கள் எஜமானர்கள்...
அவர்கள் உனது
சேவகர்கள்...
உரிமை கேளுங்கள்...

இலவசம் வேண்டாம்...
இடுங்கிப் போன கண்களுக்கு
ஒளி கேளுங்கள்...
தளர்ந்து போன தோள்களுக்கு
தன்னம்பிக்கை கேளுங்கள்...
உலர்ந்து போன வாழ்க்கைக்கு
உயிரோட்டம் கேளுங்கள்..
கரைந்து போன வளங்களுக்கு
காரணம் கேளுங்கள்...
மறைந்து போன மனிதாபிமானத்தை
மறுபடியும் கேளுங்கள்...

போதும்...!
இனாம் போதும்...!

இலவச நோய்
அடுத்த தலைமுறையினரயாவது
தாக்காமல் இருக்கட்டும்...! 

போதும்...!
இனாம் போதும்...! 

உரக்கச் சொல்லுங்கள்...
செவிகளில் ஏறவில்லையா...
உதைத்துச் சொல்லுங்கள்..!



அன்புடன்,
வசந்த்.







Saturday, March 26, 2011

ஊமைக் கனவுகள்...!


பூமி யாவும்
பூப்பூக்க வேண்டும்..
சோகமில்லா
பூபாளம் வேண்டும்..

ஜீவ நாதம்
ஊற்றாக வேண்டும்..
வானமெங்கும்
காற்றாக வேண்டும்..

ஓசை தீர்ந்த
ஒரு சந்தோஷ
சாம்ராஜ்யம் வேண்டும்..

பாஷை தாண்டி
பல சங்கீதம்
நாம் பாட வேண்டும்...

கண்ணீரே இல்லாத
பூலோகம் ஒன்று வேண்டும்...
செந்நீரே சிந்தாத
செவ்வானம் ஒன்று வேண்டும்...

ஆணும் பெண்ணும்
மட்டும் போதும் - பிற
ஜாதி மதம்
மறைய வேண்டும்...

ஆதி மழை
பொழிய வேண்டும் - மண்ணில்
போதி மரம்
வளர வேண்டும்..

பேதம்
நீங்கிவிட வேண்டும்
அன்பு வேதம்
ஓங்கி நிற்க வேண்டும்...

சாபப்
போர்க்களங்கள் யாவும்
அன்பு தீபம்
வேர் பிடிக்க வேண்டும்..

தேசம்
ஓர் குடைக்குள் வேண்டும்
எங்கும் நேசப்
பூ மலர வேண்டும்..

போதும்
வாழ்ந்த பழ வாழ்க்கை
இந்த தீது
தீப்பிடிக்க வேண்டும்..

வாழ்த்துப் பாட
தினந்தோறும்
சுக ராக
ராத்திரிகள் வேண்டும்...

பூவும்
புன்னகையும் போதும்
இந்த பூமி
ஜென்மம் பல வாழும்..!

Tuesday, March 8, 2011

எச்சரிக்கை...!

உன்
மௌனக் கண்களால்
எனை நோக்கி
புன்னகைத்து விடாதே...

மனித
இதயத்தின்
ஆயுட்காலம்
முப்பது வருடம் தான் என
மருத்துவ தீர்ப்புகள்
மாற்றி
எழுதப்பட்டு விடும்....

நிழல் வலி..!

இரண்டு
இலையுதிர்காலங்கள்
நம்
காதல் கல்லறைமேல்
இரங்கல் மலர்
தூவியாயிற்று...

அனால்,
உன்
நினைவுகள் மட்டும்
என்
நடு நிசிகளில்
நங்கூரம் பாய்ச்ச
தவறுவதில்லை....

Monday, February 7, 2011

சாத்தியம்...!?

எண்கள்
கவிதையாய்
காட்சியளிக்கும்
சாத்தியம் இருக்கிறதா?
ஆம்...
அது
அவளது
தொலைபேசி எண்களாய்
இருக்கும்பட்சத்தில்....!