Tuesday, December 26, 2017

முற்றுப்புள்ளி வரை..

தேடு
மனிதா ...!

தேடலில்
நீ தொலைந்து போகக்கூடும்...!
தேடலின் பொருட்டு
உன் திசை தேதி மறக்க கூடும்..!
தேடலில்
பசி தூக்கம் இழக்க கூடும்..!
தேடலின் வாஞ்சையில்
உறவுகளை துறக்க கூடும்..!

ஆனாலும்
தேடு மனிதா..!

ஏனெனில்,
தேடல்
தீர்ந்துபோனால்,
நீ தொலைந்து போவாய்..!


தேடல் என்பது
வாழ்க்கையின் நீட்டிப்பு..!
தேடல்
வாழ்க்கையின் ஆதாரம்..!
தேடல்
வாழ்க்கையின் பொருள்..!
தேடல்
வாழ்க்கையின் சூட்ஷமம்..!

தேடல்
வாழ்க்கையின் அச்சாணி..!

தேடல் என்பது யாது....?

திரை கடல் ஓடி
திரவியம் தேடுவதா??


தன்மானம் வளைத்து
பதவி தேடுவதா??

பொய்யாய் புகழ்ந்து
கலவி தேடுவதா?

அர்த்தமற்று சிரித்து
உறவு தேடுவதா??

உயிரோடு உறைய
உன் சரிபாதி தேடுவதா??

அண்டம் அதிர்ந்து போகும்
விஞ்ஞானம் தேடுவதா?

அல்ல...
அதுவல்ல தேடல்...!

சிந்திக்க சிந்திக்க
உள்ளம் சுகிக்குமே.. அது தேடு..

ஐம்புலன்கள் உணராத
ஆறாம் சுகம் தேடு..!

 உலக ஞானம் உள்வாங்க
 புத்தகங்கள் தேடு..!

ஆறாத காயங்களை சுமக்கும்
அனுபவங்கள் தேடு...!

உருக்கும் வறுமையிலும்
சிரிப்பாயாயின்
உண்மை அது தான் உடனே தேடு..!

இறுதி மூச்சிலும்
நகைப்பாயாயின்
ஆகச் சிறந்தது அதுதான் தேடு..!

உறவின் பிரிகையில்
மௌனிப்பாயாயின்
உள்ளிருக்கும் ஞானியை விழிமூடி தேடு..!

புலனைத்தையும் திரட்டி
உயிரை கயிறாக்கி
ஏதோ செய்கையில் மகிழ்வாயே.. அது தேடு..!

வாழ்க்கைப்  புத்தகத்தின்

முற்றுப்புள்ளி
மரணம்..!

முற்றுப்புள்ளி விழும் வரை
முற்றும் தெளி..!

--
வசந்த். த