Saturday, February 18, 2012

நிஜம்...!


எப்போதும்
எனக்கு
நான் என்பது நிஜம்...!

என்னோடிருந்தவரை தான்
எனக்கு
நீ என்பதும் நிஜம்...!

எப்போதும்
வானம் நிஜம்....
வாசம் நிஜம்....
காற்று நிஜம்...
கானலும் நிஜம்....

காதலும் நிஜம் தான்....
நீ என் வாழ்வில் வந்துபோன
காலமும் நிஜம் தான்....
நாம் காதல் கொண்டு
காலம் வென்றதாய் உணர்ந்த
காட்சியும் நிஜம் தான்....
ஆனால்...
என்னோடிருந்தவரை தான்
எனக்கு
நீ என்பது நிஜம்....

பிரிந்த சில வருடங்களில்
நான் உன்னை மறந்துபோனேன்
என்பது நிஜம்...
ஆனால்...
சொல்லாமல் கொள்ளாமல்
அவ்வப்போது
என் கனவுகளில்
நீ வந்து போகிறாய்
என்பதும் நிஜம் தான்....,
என் தனிமைப் பயணங்களில்
நீ என்
நினைவு கலைக்கிறாய்
என்பதும் நிஜம் தான்....

நெருக்கமான
உதட்டு முத்த
உஷ்ண நிமிஷத்தில்
நாம் உதிர்த்த
கண்ணீர் நிஜம் தான்....
காலம்
கண்ணீரின் உயிரை ஆவியாக்கி
எஞ்சிய உப்பை
எந்திர வாழ்க்கையின்
ஏதோ ஒரு
அவசர அத்தியாயத்தில்
அஸ்தியாக்கிவிட்டது
என்பதும் நிஜம் தான்...

இடைவெளி இழந்தும்
தீண்டாத தருணங்களில் -வாய்
தாண்டாது பரிமாறிய
வார்த்தைகள் நிஜம் தான்....
கல்வெட்டுப் போல்
சொல்லிவிட்டுப் போன
வார்த்தைகளும்
தூரத்தின் இடைவெளியில்
விழுந்து மரிக்கும்
என்பதும் நித்திய நிஜம் தான்...

உருகி உருகி
உச்சி முகர்ந்ததும்,
உள்ளங்கை வியர்வையில்
முகம் புதைத்ததும்,
எதிர்பாராத கணத்தில்
மீசை முடி இழுத்ததும்
வெட்கம் முற்றுகையிட்ட பொழுதுகளில்
வானம் பாத்ததும்,
உணர்ச்சி மிகுதியில்
பொய்யாய் கோபித்ததும்...
எல்லாம் நிஜம் தான்...
உணர்ச்சிகள்
உறவுகளின் மாற்றத்தில்
உருகி உருமாறும்
என்பதும் நிஜம் தான்....

இதை
எழுதியதின் பின்னணி
முழுக்க முழுக்க
நீ தான்
என்பதும் நிஜம் தான்....
ஆனால்...
என்னோடிருந்தவரை தான்
எனக்கு
நீ என்பதும் நிஜம்....


அன்புடன்,
--வசந்த்.