Friday, June 13, 2025

மன்னியும் பாரதி..!


நீரின்றி அமையாது 

இவ்வுலகு - பாடினான் வள்ளுவன்..
பெண் - நீயின்றி அமையாது  
எவ்வுலகும் - பாடுகிறேன் சின்னவன்..

கவனம் தேவை 
கன்னியரே...

ஓடுகின்ற நதிக்கெல்லாம் 
உன் பெயர் தான்..
பொறுமை காக்கும் 
பூமித்தாய்க்கும் நின் திருப்பெயர் தான்..

பூக்கள் ஜாதி அத்தனைக்கும் 
தலைமை நீ தான்.. 
கவிதைப் புயல் மையம் கொள்ளும் 
புள்ளியும்  நீ தான்..

அழகியலின் ஒட்டுமொத்த 
வடிவமும் நீ தான்..
வாய் திறவா சிரம் நிமிரா 
யாவையும் நீதான்..

கவனம் தேவை 
கன்னியரே 
வஞ்சகமாய்  புகழ்வதிலே   
மிஞ்சியவர் ஆடவர்கள்..

"ஆணுக்கு பெண் நிகர்"
மன்னிக்கவும் பாரதி..
சிரம் தாழ்த்தி 
மறுக்கின்றேன்..

விதையும் நிலமும் 
எங்ஙனம் சமம்?
விதைக்க மட்டுமே தெரிந்தவன் 
கருவின் சுமையை  
எப்படி அறிவான்?

பொருளும் பொறுப்பும் 
எப்படி சமம்?
வேட்டை மட்டுமே ஆடுபவன்  
இல்லச்  சுமைகள் 
எப்படி அறிவான்?

அறிவும் அன்பும் 
எவ்வாறு சமம்?
வான சாஸ்திரங்கள் அளந்தவன் 
பிள்ளை வளர்ப்பை  
எப்படி அறிவான்?

கடமையும் கருணையும் 
எப்படி சமம்?
எல்லைகள் அற்றதல்லவா 
கருணைக் கடல்??

சரி...
முன்பு 
அவன் மட்டுமே உழைத்தான்...
அவன் மட்டுமே சிந்தித்தான்...
அவன் எழுத்து மட்டுமே அச்சானது..
அவன் பேசசு மட்டுமே மேடையேறியது..
அவன் மட்டுமே வரலாறானான்..

சற்று உற்று நோக்கும் 
அக்கினிக் கவிஞனே..

வருணனைகளின் கட்டுடைத்து
விண்வெளியின் 
மையத்தில் பெண்ணினம்..

அழகியலின் திரை கிழித்து
அறிவியலின் 
சிகரத்தில் பெண்ணினம்..

கலைகளுக்கு மட்டுமே 
என்ற தடை உடைத்து 
கணினியிலும் கல்வியிலும் பெண்ணினம்..

மரபுகளின் வலை அறுத்து
யாவற்றிலும்
நிரம்பி நிற்கும் பெண்ணினம்..
  
காய்கறி வெட்ட மட்டுமே  
கத்தி பிடித்த கைகள் 
போர்த்தொழில் புரியவும் 
கற்றுக்கொண்டு விட்டன..

இல்லம் தரணி 
இரண்டையும் ஆளும் 
வல்லமை கொண்டது 
பெண்ணினம்.. 

ஒற்றைத் துளி அருந்தி 
உயிர் வாழவும் 
சமுத்திரம் கடந்து 
கரையேறவும் 
சூத்திரம் அறிந்தது 
பெண்ணினம் மட்டுமே..

ஆகவே பாரதி...

பெண் - ஆடவனுக்கு நிகரில்லை.. 
ஆண்டவனுக்கு நிகர்..!

முடிவிலி...


தொடக்கமும் இல்லாமல் 
முடிவும் இல்லாமல் 
ஒரு சூஃபி பாடலை போலவே 
உனது ஞாபகங்கள் 
உள்மனதின் ஆழத்தில் 
ஒலித்துக்கொண்டே இருக்கிறது..!

உன் நினைவலைகளை நீந்தி 
ஜென் மனநிலையில்
நிகழ் காலத்தின் 
கரை தொடுகையில் 
நெடு நீண்ட நா கொண்ட 
உன் ஞாபகப்  பாம்பு  
எனை விருட்டென்று சுருட்டி
மீண்டும்  
உள்ளிழுத்துக் கொள்கிறது..!

உன் ஞாபக அதிர்வுகளால்  
நிசப்த தருணத்தில் 
மெல்ல மொட்டவிழும் 
என் எழுதுகோல் 
சிறகு முளைத்த வானவில்லாய் 
வண்ண வண்ணமாய் 
சிந்திச் சிதறி 
காற்றின் வெளியில் 
சுற்றித் திரிந்து 
இருட்டின் ஓவியம் போலவும் 
ஊமையின் பாடல் போலவும்
மீண்டும் என்னுள் 
மௌனமாய் மறைகிறது..

-வசந்த் தட்சிணாமூர்த்தி

சுவாசிக்க விரும்பும் புத்தகங்கள்..


புத்தகக் கடைகளுக்குள்
நுழைகிறேன்...

செவிக்கு எட்டாத
பல்லாயிர முனகல்கள்
வெவ்வேறு ஓசைகளில்
வெவ்வேறு தாளகதியில்
மனதை கனக்கச் செய்கின்றன..

பெரும் கூச்சல்..
பேரமைதி..
மௌன விம்மல்கள்..
விட்டு விட்டு
தொடர்ச்சியாக
அறைக்குள் 
மிதந்து கொண்டேயிருக்கின்றன..

கூர்ந்த கவனிப்பிற்குப் பின்
புரிந்தது,
அவை
பாலிதீன் உறைகளுக்குள்
சிறை வைக்கப் பட்டுள்ள
புத்தகங்களின்
புலம்பல்கள்..
பிஞ்சுக் குழந்தைகளின்
மூச்சுத் திணறல்கள்..
விடுதலை கோரும்
கண்ணீர் விசும்பல்கள்..

தங்களின்
மறுக்கப்பட்ட
சுதந்திரத்திற்கான
மன்றாடல்கள்...

தனக்கும்
வாசகனுக்கும்
இடையில் உள்ள
தடையை
தகர்க்க முயலும்
அகிம்சை கூக்குரல்கள்...

தன்னை
எடுப்போரின்
கைகளில்
ஸ்பரிசம் தொட்டு
தவழத் துடிக்கும்
மழலை கெஞ்சல்கள்...

கைகொணர்வோர்
புரட்டிப் பார்த்து
தங்களின் வீட்டிற்கு அழைத்துச் சென்றுவிட வேண்டும் என்ற
தனிமை தத்தளிப்புகள்...

விற்பனையாளர்களே..
விரல் பட்டால்
விலை போகாதென்று
புத்தகங்களின் 
கழுத்தை நெறிக்காதீர்கள்..
அவைகள்
சுவாசிக்க விரும்புகின்றன.

-வசந்த் தட்சிணாமூர்த்தி

They are Eternal...

 
Unconquerable your memories are,
Reminding the steep, frosty mount.
Irresistible the thoughts are, 
Echoing the deep, silent ocean.  
Tried hard translating them but in vain,
Often I end up with haunting serene.
Conscious enough to observe the thoughts, but  
Feel not to spill the brimming heart. 
Not just the inability to inscribe; but 
The best they deserve is silence..!
Ineffable the emotions are, 
Solidly amorphous, tintless and indelible... 
For emotions shouldn't be confined in words,
Nor they be inhumed in any forms.
Can a sized vessel hold the roaring ocean;
A small bag the gusty breeze;
Or a framed clock the unending Universe?
Even to a master with zest or a veteran at his best
Their hue is changed and nuance is marred,
And are often stained with perishable tears...
Set them free as pure and wild as they can be,
Liberated, unconditional and unconstrained...
Let them stay alive undefined and unmasked.
Let them travel beyond Time,
To the unspecified destinations of Universe 
And fill the secret rooms of Stellars and Space...
They linger and loiter inconspicuously
Even beyond the respective people..!
People die; sometimes do the words;
But, not the emotions, as they are ETERNAL..!

--Vasanth Dhakshinamoorthy

வகுப்பறை வணங்கு...


மூன்று அறைகளை 
உன் வாழ்நாளில் 
நீ கட்டாயம் 
கடந்து போவாய் மனிதா..

முதல் அறை 
கருவறை..
மூன்றாம் அறை 
கல்லறை..
இடைப்பட்ட காலங்களில் 
வகுப்பறை..!

கருவறையின் நினைவுகள் சுமக்க 
உன் ஞாபகக் கிடங்கில் 
வசதியில்லை..
ஆனால்,
வகுப்பறையின் நினைவுகள் சுமக்க 
உன் ஞாபகக் கிடங்கு போதாது..

உனது சந்தோஷத்தில் சிரித்து 
உனது சோகத்தில் அழுது 
உனது துக்கத்தை பகிர்ந்து 
உனது அறிவை வளர்த்ததால், 
தாய் தந்தையரைப்  போலவே 
வணங்க வேண்டிய பந்தங்களில் 
வகுப்பறையும் ஒன்று...!

சிலர் நினைக்கலாம், 
பாவம்
மெத்தப் படித்தவனுக்கு 
சித்தம் கலங்கிற்று என்று..

வகுப்பறைக்கு உயிரா..?
கட்டிடங்களில் கண்களில் 
கண்ணீரா?
நாற்காலிகளெல்லாம் 
சிநேகம் கொள்ளுமா?

அனால்,
கேள் மனிதா..!
தனிமையில் 
வகுப்பறை திறந்து 
உற்று கவனி..
உதிர்ந்து கிடக்கும் 
ஞாபகச் சருகுகளின் 
சத்பம் உணர்வாய்..
வகுப்பறை சேமித்து வைத்த 
சப்த அலைகளில் 
நீ தடுக்கி விழுவாய்..
ஒவ்வொரு மேசையும் 
ஒரு கதை சொல்லும்..
ஜன்னல் கதவுகளெல்லாம் 
ஜாடை பேசும்..
கரும்பலகைளெல்லாம் 
பல கவிதை சொல்லும்..

கசக்கி எறியப்பட்ட 
காகிதங்கள் போலவே 
உன் நினைவுகள் 
சிதறிக் கிடக்கும்...

ஓட்டமும் நடையுமாய் 
மூச்சிரைத்த சில நாள்..
பேருந்தை தவறவிட்டு 
தாமதித்த சில நாள்..
அவசர ஓட்டத்தில் 
செருப்பறுந்த ஒரு நாள்..
அம்மாவோடு சண்டையிட்டு 
சோகத்தோடு ஒரு நாள்..
நண்பனோடு கோபித்து  
தள்ளியமர்ந்த சில நாள்..
வாலிபக் கிறுக்கேறி 
மயங்கி கிடந்த சில நாள்..
பாடச்சுமை தாளாமல் 
தளர்ந்து கிடந்த சில நாள்..
வறுமை உன்னை கசக்கிப் பிழிய 
வாடிக் கிடந்த சில நாள்..
வாழ்க்கைப் பாடம் 
கற்றுத் தெளிந்ததாய் 
மெத்தனம் கொண்ட சில நாள்...

வகுப்பறை கூட 
கருவறை தான்..!
ஆனால், ஆச்சரியம், 
பல குழந்தைகளுக்கு 
ஒரே தொப்புள் கொடி..!
ஒரே நேரத்தில் 
இருபதுக்கு மேற்பட்ட  பிரசவம்..!

கருவறையில் கூட 
உனது வாசம் 
எட்டோ, பத்தோ 
மாதக் கணக்கில் தான் மனிதா..!

ஆனால்,

வகுப்பறையில் தான்
மூன்றில் ஒரு பகுதி 
உன் ஆயுள் கழிக்கிறாய்...!

வகுப்பறை 
வணங்கு மனிதா..!
கருவறையினும் 
வகுப்பறை சிறந்தது..!

ஏனெனில்,

கருவறையில் 
நீ குழந்தையாகிறாய்..!
ஆனால்,
வகுப்பறையில் தான் 
நீ மனிதனாகிறாய்..!

--
வசந்த் தக்ஷிணாமூர்த்தி.

Monday, January 22, 2018

கலங்காதீர் கவிப்பேரரசே...!

காணொளி காண்கிறேன்..!

கவிப்பேரரசு 
கலங்குகிறான்..!

நெடு காலமாய் 
கவிதை  மட்டுமே பொழிந்து வந்த 
மேகம் ஒன்று 
முதன் முறையாய் 
கண்ணீர் பொழிகிறது...!

ஓங்கி முழங்குகின்ற 
ஒரு இடியின் குரல் 
இன்று 
தழுதழுத்து கேட்கிறது..!

தமிழை 
குழைத்துக் குழைத்து 
நயத்தோடு பாடிய  
எங்கள் கவிக்குயில் 
இன்று 
சுரத்தில்லாமல் கூவுகிறது..!

பரந்து விரிந்து 
தமிழ் சமைத்துக்கொண்டிருந்த 
ஒரு ஆழ்கடல்
இன்று  
சத்தமில்லாமல் 
தத்தளிக்கிறது..!

உலகத் தரத்திற்கு 
தமிழை 
உயர்த்திப் பிடித்தவனின் 
எழுதுகோல் 
உள்ளூரில் 
சில்லு சில்லாக 
உ டைக்கப்படுகிறது..!

புதுப் புது வார்த்தைகளால் 
தமிழ்த் தாயின் 
கிரீடத்தை 
அலங்கரித்தவன், 
அகல பாதாள 
அமில வார்த்தைகளால் 
அங்கீகரிக்கப் படுகிறான்..!

திரித்துப் பேசும் 
தந்திரக் காரர்களே..
உண்மை சொல்கிறேன் கேளுங்கள்..!

உலக அரங்கில் 
தமிழின் 
தற்போதைய முகவரி 
இவன் தான்..!

எழுதி எழுதியே 
பல தலைமுறைகளை 
தட்டியெழுப்பியவன் 
இவன் தான்..!

உள்ளூர் இலக்கியம் 
போதாது என 
தன் சந்ததியினருக்கு 
உலக இலக்கியத்தையும் 
சொல்லிக் காட்டியவன் 
இவன் தான்..!

இவனிலிருந்து தெறித்த 
அக்கினி வார்த்தைகளில் தான் 
எங்களது எழுதுகோல் 
தங்களை 
சாணை பிடித்துக் கொண்டது..!

இவனது 
உச்சரிப்பு தான்
தமிழை 
மீண்டும்  முடி சூட வைத்தது..!

தமிழை 
கர்வம் கலந்த அழகோடு 
உச்சரித்தவரின் 
பட்டியலில் 
இவன் பெயர் மட்டுமே 
முதலும் 
கடைசியும்..!

செவி கொடு
சமுதாயமே 
உனக்கொரு சேதி சொல்கிறேன்..!
கவிஞன் கலங்கும் 
தேசத்தில் 
கலைமகள் வசிப்பதில்லை...

ஆழமும் நீளமும் 
அகலமும் உயரமும் 
அளப்பரிய  
அடர்ந்த
இலக்கியக்  காடு இது...
சல்லி வேர் பிடுங்கி
சாய்த்துவிட முடியாது..!

வெடித்துச் சிதறும் 
எரிமலைக் குழம்பு இது..
தீக்குச்சிகள் சில 
தின்றுவிட முடியாது..!

வெற்று வார்த்தைக்காரர்களே..!
உங்கள் 
முப்பாட்டனுக்கும் மூத்த 
தமிழ்ப் பாட்டன் இவன்..!
முடிந்தால் 
இவன் 
தமிழோடு தர்க்கம் செய்யுங்கள்,
உங்கள் 
முகம் கிழியும்..!

கலங்காதீர் கவிப்பேரரசே..!
உம்மைத் தீண்டும் 
நாவை
தீக்குத் தின்னக் கொடுப்போம்..! 

பிறவா தலைமுறைகள் பல 
தலைவணங்கும் 
இறவா தமிழ் உமது..!
அறியா சிறுவர்களது பேச்சா 
உன் புகழ் குறைக்கும்??

சொன்னது நீர் தான்..!
ஒவ்வொரு வாயிலும் ஒற்றை நாக்கு 
உலகின் வாயில் ரெட்டை நாக்கு..!
கத்தும் நாய்க்கு காரணம் வேண்டாம் 
தன நிழல் பார்த்து தானே குரைக்கும்..! 
உலகின் வாயை தைத்திடு,
அல்லது இரண்டு செவிகளை இறுக்கி மூடிடு..!
உலகின் வாயை தைப்பது கடினம்..
உந்தன் செவிகள் மூடுதல் சுலபம்..!


 --வசந்த் தட்சிணாமூர்த்தி

Tuesday, December 26, 2017

முற்றுப்புள்ளி வரை..

தேடு
மனிதா ...!

தேடலில்
நீ தொலைந்து போகக்கூடும்...!
தேடலின் பொருட்டு
உன் திசை தேதி மறக்க கூடும்..!
தேடலில்
பசி தூக்கம் இழக்க கூடும்..!
தேடலின் வாஞ்சையில்
உறவுகளை துறக்க கூடும்..!

ஆனாலும்
தேடு மனிதா..!

ஏனெனில்,
தேடல்
தீர்ந்துபோனால்,
நீ தொலைந்து போவாய்..!


தேடல் என்பது
வாழ்க்கையின் நீட்டிப்பு..!
தேடல்
வாழ்க்கையின் ஆதாரம்..!
தேடல்
வாழ்க்கையின் பொருள்..!
தேடல்
வாழ்க்கையின் சூட்ஷமம்..!

தேடல்
வாழ்க்கையின் அச்சாணி..!

தேடல் என்பது யாது....?

திரை கடல் ஓடி
திரவியம் தேடுவதா??


தன்மானம் வளைத்து
பதவி தேடுவதா??

பொய்யாய் புகழ்ந்து
கலவி தேடுவதா?

அர்த்தமற்று சிரித்து
உறவு தேடுவதா??

உயிரோடு உறைய
உன் சரிபாதி தேடுவதா??

அண்டம் அதிர்ந்து போகும்
விஞ்ஞானம் தேடுவதா?

அல்ல...
அதுவல்ல தேடல்...!

சிந்திக்க சிந்திக்க
உள்ளம் சுகிக்குமே.. அது தேடு..

ஐம்புலன்கள் உணராத
ஆறாம் சுகம் தேடு..!

 உலக ஞானம் உள்வாங்க
 புத்தகங்கள் தேடு..!

ஆறாத காயங்களை சுமக்கும்
அனுபவங்கள் தேடு...!

உருக்கும் வறுமையிலும்
சிரிப்பாயாயின்
உண்மை அது தான் உடனே தேடு..!

இறுதி மூச்சிலும்
நகைப்பாயாயின்
ஆகச் சிறந்தது அதுதான் தேடு..!

உறவின் பிரிகையில்
மௌனிப்பாயாயின்
உள்ளிருக்கும் ஞானியை விழிமூடி தேடு..!

புலனைத்தையும் திரட்டி
உயிரை கயிறாக்கி
ஏதோ செய்கையில் மகிழ்வாயே.. அது தேடு..!

வாழ்க்கைப்  புத்தகத்தின்

முற்றுப்புள்ளி
மரணம்..!

முற்றுப்புள்ளி விழும் வரை
முற்றும் தெளி..!

--
வசந்த். த