காணொளி காண்கிறேன்..!
கவிப்பேரரசு
கலங்குகிறான்..!
நெடு காலமாய்
கவிதை மட்டுமே பொழிந்து வந்த
மேகம் ஒன்று
முதன் முறையாய்
கண்ணீர் பொழிகிறது...!
ஓங்கி முழங்குகின்ற
ஒரு இடியின் குரல்
இன்று
தழுதழுத்து கேட்கிறது..!
தமிழை
குழைத்துக் குழைத்து
நயத்தோடு பாடிய
எங்கள் கவிக்குயில்
இன்று
சுரத்தில்லாமல் கூவுகிறது..!
பரந்து விரிந்து
தமிழ் சமைத்துக்கொண்டிருந்த
ஒரு ஆழ்கடல்
இன்று
சத்தமில்லாமல்
தத்தளிக்கிறது..!
உலகத் தரத்திற்கு
தமிழை
உயர்த்திப் பிடித்தவனின்
எழுதுகோல்
உள்ளூரில்
சில்லு சில்லாக
உ டைக்கப்படுகிறது..!
புதுப் புது வார்த்தைகளால்
தமிழ்த் தாயின்
கிரீடத்தை
அலங்கரித்தவன்,
அகல பாதாள
அமில வார்த்தைகளால்
அங்கீகரிக்கப் படுகிறான்..!
திரித்துப் பேசும்
தந்திரக் காரர்களே..
உண்மை சொல்கிறேன் கேளுங்கள்..!
உலக அரங்கில்
தமிழின்
தற்போதைய முகவரி
இவன் தான்..!
எழுதி எழுதியே
பல தலைமுறைகளை
தட்டியெழுப்பியவன்
இவன் தான்..!
உள்ளூர் இலக்கியம்
போதாது என
தன் சந்ததியினருக்கு
உலக இலக்கியத்தையும்
சொல்லிக் காட்டியவன்
இவன் தான்..!
இவனிலிருந்து தெறித்த
அக்கினி வார்த்தைகளில் தான்
எங்களது எழுதுகோல்
தங்களை
சாணை பிடித்துக் கொண்டது..!
இவனது
உச்சரிப்பு தான்
தமிழை
மீண்டும் முடி சூட வைத்தது..!
தமிழை
கர்வம் கலந்த அழகோடு
உச்சரித்தவரின்
பட்டியலில்
இவன் பெயர் மட்டுமே
முதலும்
கடைசியும்..!
செவி கொடு
சமுதாயமே
உனக்கொரு சேதி சொல்கிறேன்..!
கவிஞன் கலங்கும்
தேசத்தில்
கலைமகள் வசிப்பதில்லை...
ஆழமும் நீளமும்
அகலமும் உயரமும்
அளப்பரிய
அடர்ந்த
இலக்கியக் காடு இது...
சல்லி வேர் பிடுங்கி
சாய்த்துவிட முடியாது..!
வெடித்துச் சிதறும்
எரிமலைக் குழம்பு இது..
தீக்குச்சிகள் சில
தின்றுவிட முடியாது..!
வெற்று வார்த்தைக்காரர்களே..!
உங்கள்
முப்பாட்டனுக்கும் மூத்த
தமிழ்ப் பாட்டன் இவன்..!
முடிந்தால்
இவன்
தமிழோடு தர்க்கம் செய்யுங்கள்,
உங்கள்
முகம் கிழியும்..!
கலங்காதீர் கவிப்பேரரசே..!
உம்மைத் தீண்டும்
நாவை
தீக்குத் தின்னக் கொடுப்போம்..!
பிறவா தலைமுறைகள் பல
தலைவணங்கும்
இறவா தமிழ் உமது..!
அறியா சிறுவர்களது பேச்சா
உன் புகழ் குறைக்கும்??
சொன்னது நீர் தான்..!
ஒவ்வொரு வாயிலும் ஒற்றை நாக்கு
உலகின் வாயில் ரெட்டை நாக்கு..!
கத்தும் நாய்க்கு காரணம் வேண்டாம்
தன நிழல் பார்த்து தானே குரைக்கும்..!
உலகின் வாயை தைத்திடு,
அல்லது இரண்டு செவிகளை இறுக்கி மூடிடு..!
உலகின் வாயை தைப்பது கடினம்..
உந்தன் செவிகள் மூடுதல் சுலபம்..!
--வசந்த் தட்சிணாமூர்த்தி