Saturday, March 26, 2011

ஊமைக் கனவுகள்...!


பூமி யாவும்
பூப்பூக்க வேண்டும்..
சோகமில்லா
பூபாளம் வேண்டும்..

ஜீவ நாதம்
ஊற்றாக வேண்டும்..
வானமெங்கும்
காற்றாக வேண்டும்..

ஓசை தீர்ந்த
ஒரு சந்தோஷ
சாம்ராஜ்யம் வேண்டும்..

பாஷை தாண்டி
பல சங்கீதம்
நாம் பாட வேண்டும்...

கண்ணீரே இல்லாத
பூலோகம் ஒன்று வேண்டும்...
செந்நீரே சிந்தாத
செவ்வானம் ஒன்று வேண்டும்...

ஆணும் பெண்ணும்
மட்டும் போதும் - பிற
ஜாதி மதம்
மறைய வேண்டும்...

ஆதி மழை
பொழிய வேண்டும் - மண்ணில்
போதி மரம்
வளர வேண்டும்..

பேதம்
நீங்கிவிட வேண்டும்
அன்பு வேதம்
ஓங்கி நிற்க வேண்டும்...

சாபப்
போர்க்களங்கள் யாவும்
அன்பு தீபம்
வேர் பிடிக்க வேண்டும்..

தேசம்
ஓர் குடைக்குள் வேண்டும்
எங்கும் நேசப்
பூ மலர வேண்டும்..

போதும்
வாழ்ந்த பழ வாழ்க்கை
இந்த தீது
தீப்பிடிக்க வேண்டும்..

வாழ்த்துப் பாட
தினந்தோறும்
சுக ராக
ராத்திரிகள் வேண்டும்...

பூவும்
புன்னகையும் போதும்
இந்த பூமி
ஜென்மம் பல வாழும்..!

No comments:

Post a Comment