எல்லோரும்
வாழ்வின் அர்த்தம் புரியாமல்
ஏதோ ஒரு
தாள கதியில் ஆடிக்கொண்டிருக்க,
உன்
பாத அடிகள் மட்டும்
நிதானமாய்....
உறங்கும் நேரம் தவிர
மற்ற நேரங்களில்
மனிதர்கள்,
மன உலையின் வெப்பங்களை
விழி வழியே துப்பிக்கொண்டிருக்க
உன் விழிகள் மட்டும்
எப்போதும்
நிசப்தமாய்...
தெரியுமா உனக்கு....?
யாருமே
உன் புன்னகைக்கு
மறு புன்னகை தருவதில்லை...
ஆயினும்
யாருக்கும் நீ
மௌனப் புன்னகை
பூக்க தவறுவதில்லை...
நமக்குள்
இது என்ன பந்தம்...?
பூர்வஜென்மமா
அல்லது
பூர்வீகமா??
வியக்கிறேன்...!
எங்கு சென்றாலும்
நீ என்னை தொடர்கிறாய்...
ஆயிரம் முகங்களுக்கு
மத்தியிலும்
உன் முகத்தை மட்டும்
என் விழிகள் சட்டென்று
படம் பிடித்து விடுகின்றன...
ஆயிரம் இரைச்சல்கள்
பின்னணி இசை
சேர்த்தாலும்
உன் குரலை மட்டும்
வடிகட்டும் திறனை
என் காதுகள்
கற்றுக்கொண்டுவிட்டன...
ஒவ்வொரு முறையும்
நீ என்னை கடந்து போகையில்
உன் விழி பார்த்து
நெகிழ்வதா,
அல்லது
உன் புன்னகை பார்த்து
மகிழ்வதா
என்ற குழப்பத்திலேயே
அனிச்சை செயலாய்
என் கைகள்
சட்டைப் பையை
துழாவுகையில்
நீ கடந்தே போய் விடுகிறாய்...
என் பாசத்திற்குரியவனே....
ஓ...
பார்வையற்ற
ரயில் பாடகனே...!
wow..wow..wt a climax...wonderful vasanth..
ReplyDelete